பொங்கல் திருநாளும்
புத்தாண்டுப் பெருநாளும் ஒருமித்து சங்கமிக்கும் நன்னாள் இன்று. காட்டைக் களமாக்கி, மேட்டைக்
குளமாக்கி, கரடுமுரடுகளைக் கால்வாயாக்கி, வயல்கள் அமைத்து வரப்புகள் தொகுத்து, உழுது
நீர்பாய்ச்சி, களை எடுத்துக் களைப்பாற்றி, முற்றிய கதிரை அறுத்து வந்து முற்றத்தில் கொட்டி,
அளந்து எடுத்து ஆனந்தத்துக்கு அடிகோலி, பாடுபட்டாலே பலன் உண்டு, உழைத்தால்தான் உயர்வுண்டு
என்பதைச் சொல்லி நிற்கும் நாள் இது. போகியென்றும், பொங்கலென்றும், மாட்டுப் பொங்கலென்றும்,
காணும் பொங்கலென்றும் கொண்டாடும் தொடர் விழாக்காலம் இது. இதனூடே, புத்தாண்டும், உழவர்
தினமும், வள்ளுவர் தினமும் வானோங்கி நிற்கின்றன. பழையன களைதலும், புதியன புகுதலும்
நோக்கமெனில், புதிய சிந்தனைகளுக்கு வித்திட்டு, முத்தாய் சேகரித்து பகுத்தறிவுப் போங்கலாய்க்
கொண்டாடி மகிழ்வோம்.தீமை கண்டு பொங்குவோம். நன்மை கொண்டு பொங்கலிடுவோம்.