புனித பூமியில் வாழும் மக்களுக்கான நிதியுதவிகளை கத்தோலிக்க சமூகங்கள் தாராள மனதுடன்
வழங்க வேண்டும் என திருப்பீட அதிகாரி அழைப்பு
மார்ச்09,2010 இயேசு பிறந்த புனித பூமியில் வாழும் மக்களுக்கான நிதியுதவிகளை உலகின் பலபகுதிகளில்
வாழும் கத்தோலிக்க சமூகங்கள் தாராள மனதுடன் வழங்க வேண்டும் என அழைப்பு விடுத்துள்ளார்
திருப்பீட அதிகாரி கர்தினால் லெயோனார்தோ சான்ரி.
ஒவ்வோர் ஆண்டும் புனித வெள்ளியன்று
அகில உலகத் திருச்சபையில் ஒவ்வொரு பங்குத்தளத்திலும் புனித பூமியின் கிறிஸ்தவர்களுக்கென
திரட்டப்படும் நிதி பற்றிக் குறிப்பிட்ட, கீழை ரீதி திருச்சபைகளுக்கான பேராயத்தின் தலைவர்
கர்தினால் சான்ரி, மத்திய கிழக்குப் பகுதியினர்க்கான இவ்வொருமைப்பாட்டுச் செயல் திருச்சபையில்
நாம் என்ற உணர்வை அதிகரிக்க உதவுகிறது என்றார்.
மத்திய கிழக்குப் பகுதியிலிருந்து
கிறிஸ்தவர்கள் வெளியேறி வருவதைக் குறித்து கவலை கொண்டுள்ள திருச்சபை, அப்பகுதியில் கிறிஸ்தவர்களின்
இருப்பை உறுதி செய்வதில் அரசு அதிகாரிகளின் ஒத்துழைப்பை வேண்டுவதோடு அப்பகுதி மக்களுடன்
ஒருமைப்பாட்டை அறிவிப்பதாகவும் தெரிவித்தார் கர்தினால்.