தூரம், பக்கம், நெருக்கம் இவைகளெல்லாம் அங்குலம், அடி, மீட்டர், மைல் என்ற வெளி உலகின்
அளவுகளா? உள் மனதின் அளவுகளா? ஓர் அங்குலம் இடைவெளியும் இன்றி அருகருகே அமர்ந்திருக்கும்
கணவனும் மனைவியும், மனத்தால் பல ஆயிரம் மைல்கள் பிரிந்திருப்பது சாத்தியமே. பல ஆயிரம்
மைல்கள் பிரிந்திருக்கும் இருவர், நினைவால், மனத்தால் நெருங்கியிருப்பதும் சாத்தியமே. வெளி
உலகில் உள்ள தூரம், பக்கம், நெருக்கம் இவற்றை அளக்க, நிர்ணயிக்க, தூரத்தைப் பக்கமாய்
மாற்ற கருவிகள் பல நம் கைவசம் உள்ளன. உள் மனதில் தூரம், பக்கம், நெருக்கம் இவைகளை
அளக்க, மாற்றி அமைக்க கருவி தேவையில்லை. கனிவு தேவை. 1609ம் ஆண்டு, ஆகஸ்ட் 25 -
இத்தாலிய வானியல் அறிஞர் கலிலியோ கலிலி தனது முதலாவது தொலைநோக்கியை அறிமுகப்படுத்தினார்
என்பதைக் கேள்விப்பட்டதும் மனதில் எழுந்த எண்ணங்கள் இவை.