அகிலமெங்கும் அன்னை மரியாவுக்குத்தான் எத்தனை ஆலயங்கள், எத்தனை பெயர்கள், எத்தனை திருவிழாக்கள்!
அனைத்திற்கும் அவள் ‘இறைவனின் தாய்’ என்ற பெருமையே காரணமாகும். டிசம்பர் மாதம் 8 ஆம்
நாள் மாசற்ற அன்னை மரியாவின் விழாவைச் சிறப்பித்தோம்.
மக்களுக்கு மீட்பு என்னும்
கொடையை அளிப்பவர் இறைவன் மட்டுமே. அன்னை மரியா மீட்பு அளிக்கும் மீட்பர் அல்ல. மாறாக
இறைவனின் மீட்புத் திட்டத்தில் என்றும் உடனிருப்பவர். இயேசுவின் பிறப்பு, பணிவாழ்வு,
சிலுவை மரணம் மற்றும் உயர்ப்பில் உடனிருந்தவர் தாய் மரியா. அன்னை மரியா இயேசுவின் வாழ்விற்குச்
சாட்சியாகவும், முழுமையாகத் தன்னையே தன் மகன் இயேசுவின் மீட்புத் திட்டத்தில் இணைத்துக்
கொண்டவராகவும் விளங்கினார்.
அன்புச் சீடர் அன்னை மரியாவை ஏற்றுக்கொண்டது போல,
கத்தோலிக்கத் திருச்சபையின் அங்கத்தினர் அனைவரும் அன்னை மரியாவைத் தங்கள் இல்லங்களிலும்
உள்ளங்களிலும் தாயாக ஏற்றுக்கொள்கின்றனர். அந்த அன்னை மரியாவின் ‘இதோ நான் உமது அடிமை.
உமது வார்த்தையின்படியே ஆகட்டும்’ என்ற வார்த்தைகளை ஆழமாக சிந்தித்து இறைச் சித்தத்தை
ஏற்று வாழ முற்படுவோமாக.