மே 30, 2012. ஜூன், ஜூலை, ஆகஸ்ட் மாதங்களே இத்தாலிக்கு கோடை காலம். ஜூன் மாதம் இரண்டாம்
வாரத்திலிருந்து செப்டம்பர் முதல் வாரம் வரை, கோடை காலம் நீடிக்கும் என்பதால், மாணவர்களுக்கு
அது விடுமுறை காலம். ஆனால் இவ்வாண்டு தற்போதே வெயிலின் தாக்கம் அதிகமாக இருப்பதால், இவ்வாண்டு
கோடை வெயில் அதிகமாக இருக்குமோ என்ற அச்சம் துவங்கியுள்ளது. வெயிலையும் பொருட்படுத்தாமல்,
திருப்பயணிகள், சுற்றுலாப்பயணிகள் என மக்கள் பெருமெண்ணிக்கையில் திருத்தந்தையின் மறைபோதகத்திற்கு
செவிமடுக்க வருவதால், இப்புதன் பொதுமறைபோதகமும் தூய பேதுரு பேராலய வளாகத்திலேயே இடம்பெற்றது.
கடந்த சில வாரங்களாக 'புனித பவுலின் மடல்களில் செபம்' குறித்த சிந்தனைகளை வழங்கி வரும்
திருத்தந்தை, இவ்வாரமும் அதே தலைப்பிலேயேத் தொடர்ந்தார்.
மனித குலத்திற்கு கடவுள்
'ஆம்' என வழங்கிய பதிலுரையும், அவரின் அனைத்து வாக்குறுதிகளின் நிறைவுமே இயேசு எனவும்,
நாம் கடவுளைப் போற்றிப் புகழும் போது இயேசுவின் வழியாக 'ஆமென்' எனச் சொல்கிறோம் (2 கொரி
1:19-20) என்றும் உறுதிபடக் கூறுகிறார் தூய பவுல். தூய பவுலைப் பொறுத்தவரையில்,
செபம் என்பது அனைத்திற்கும் மேலாக இறைவனின் கொடை. இது, தன் மகனையே இவ்வுலகிற்கு அனுப்பிய
நிகழ்வில் முற்றிலுமாக வெளிப்படுத்தப்பட்ட இறைவனின் பற்றுறுதி கொண்ட அன்பில் சாணையிட்டுத்
தீட்டப்பட்டது, மற்றும் தூய ஆவியின் கொடை. நம் இதயங்களில் பொழியப்பட்ட தூய ஆவி, கிறிஸ்துவில்
நமக்கு கடவுள் வழங்கிய 'ஆம்' என்பதன் இருப்பைத் தொடர்ந்து உறுதிச் செய்வதுடன், இறைவனுக்கு
'ஆம்', அதாவது 'ஆமென்' என உரைக்க பலம் தருபவராகவும் விளங்கி, தந்தையாம் இறைவனை நோக்கி
நம்மை வழிநடத்துகிறார். இஸ்ரயேலின் தொன்மைகால வழிபாட்டுச் செபங்களில் தன் மூலத்தைக்
கொண்டுள்ள, மற்றும் ஆதிகால திருஅவையால் எடுத்துக் கொள்ளப்பட்ட 'ஆமென்' என்ற பதத்தின்
பயன்பாடு, இறைவார்த்தையில் நம் உறுதியான விசுவாசத்தையும், இறைவனின் வாக்குறுதிகளில்
நம் நம்பிக்கையையும் வெளிப்படுத்துவதாக உள்ளது. இறைத்தந்தையின் விருப்பத்திற்கு இயேசுவின்
கீழ்ப்படிதலை, நம் தனிப்பட்ட மற்றும் பொது செபத்தை நிறைவு செய்யும் 'ஆம்' என்பதன் வழியாக
நாம் எதிரொலிக்கிறோம். மேலும், இறைவனுடன் ஒன்றிப்பில் புதிய, மற்றும், மாற்றம் பெற்ற
வாழ்வை வாழ, தூய ஆவியின் கொடை வழியாக வலிமைப் பெறுகிறோம்.
இவ்வாறு தன் புதன் பொதுமறைபோதகத்தை
வழங்கிய திருத்தந்தை, உரோம் நகருக்கு அருகேயுள்ள காஸ்தல் கந்தோல்ஃபோவில் இடம்பெறும் புத்த-கிறிஸ்தவ
கருத்தரங்கில் பங்குபெறுவோருக்கும், வியட்நாம், இந்தியா, அயர்லாந்து, இங்கிலாந்து, நார்வே,
இந்தோனேசியா, ஜப்பான், அமெரிக்க ஐக்கிய நாடு ஆகியவைகளிலிருந்து வந்திருந்த ஆங்கிலமொழி
பேசும் திருப்பயணிகளுக்கும் தன் வாழ்த்துக்களை வெளியிட்டு, இறுதியில் தன் அப்போஸ்தலிக்க
ஆசீரையும் அளித்தார்.