2012-06-06 15:38:48

உலகச் சுற்றுச்சூழல் நாளையொட்டி ஐ.நா.பொதுச் செயலர் வெளியிட்ட செய்தி


ஜூன்,06,2012. சரியான திட்டங்களை வகுத்து, பொருத்தமான வழிகளை உலக அரசுகள் பின்பற்றினால் சுற்றுச் சூழலையும், மக்களின் முன்னேற்றத்தையும் இணைத்துச் செல்லமுடியும் என்று ஐ.நா. பொதுச்செயலர் பான் கி மூன் கூறினார்.
இச்செவ்வாயன்று கடைப்பிடிக்கப்பட்ட உலகச் சுற்றுச்சூழல் நாளையொட்டி செய்தி வெளியிட்ட ஐ.நா. பொதுச்செயலர், உலகில் தற்போது உள்ள இயற்கைச் செல்வங்களை அனைவரும் சரிவர பயன்படுத்தும் வழிகளை ஆய்வு செய்யும் கடமை உள்ளது என்று கூறினார்.
நாற்பது ஆண்டுகளுக்கு முன்னர் 1972ம் ஆண்டு உலகச் சுற்றுச்சூழல் குறித்த விழிப்புணர்வை உருவாக்கவும், உலகின் இயற்கைச் செல்வங்களைத் தேவையான அளவு பயன்படுத்தும் கலாச்சாரத்தை வளர்க்கவும் ஐ.நா.அவை உருவாக்கிய நாள் உலகச் சுற்றுச் சூழல் நாள்.
இம்மாதம் 20ம் தேதி முதல் 22ம் தேதி முடிய பிரேசில் நாட்டின் ரியோ டி ஜெனீரோவில் நடைபெற உள்ள Rio+20 அகில உலக உச்சி மாநாடு, சுற்றுச் சூழலைப் பற்றிய விழிப்புணர்வை மீண்டும் மக்களுக்கு எழுப்பும் என்று தான் நம்புவதாக பான் கி மூன் தன் செய்தியில் குறிப்பிட்டுள்ளார்.
Rio+20 மாநாட்டில் மனித குலத்திற்குத் தேவையான சக்திகளை உருவாக்கும் புதிய வழிகளைக் கண்டறியவும், புதுவகை வேளாண்மை முறைகளைக் கண்டுபிடிக்கவும் வழிமுறைகள் ஆய்வு செய்யப்படவேண்டும் என்று ஐ.நா.வின் கல்வி மற்றும் கலாச்சார அமைப்பான UNESCOவின் தலைவர் Irina Bokova, உலகச் சுற்றுச்சூழல் நாளையொட்டி வெளியிட்ட தன் செய்தியில் கூறியுள்ளார்.








All the contents on this site are copyrighted ©.