ஜூன்,25,2012. கடவுளால் ஆகாதது ஒன்றுமில்லை, கடவுளுக்கு எல்லாம் இயலக்கூடியதே என்பதை
இஞ்ஞாயிறன்று திருஅவை சிறப்பித்த திருமுழுக்கு யோவானின் பிறப்பு நமக்கு நினைவுபடுத்துகின்றது
என்று திருத்தந்தை 16ம் பெனடிக்ட் கூறினார். வத்திக்கான் தூய பேதுரு வளாகத்தில் இஞ்ஞாயிறு
நண்பகலில் கூடியிருந்த ஆயிரக்கணக்கான விசுவாசிகளுக்கு மூவேளை செப உரை வழங்கியபோது இவ்வாறு
கூறிய திருத்தந்தை, யோவான், உண்மையிலேயே, அவரது தாயின் வயிற்றிலிருந்தே இயேசுவுக்கு முன்னோடியாக
இருக்கிறார் என்று உரைத்தார். யோவான் தாயின் வயிற்றில் அற்புதமாக உருவானதே, கடவுளால்
ஆகாதது ஒன்றுமில்லை என்பதன் அடையாளமாக இருக்கின்றது என்று கூறிய திருத்தந்தை, நமது அன்னைமரியாவுக்குப்
பிறகு புனித யோவானின் பிறப்பே திருவழிபாட்டில் திருவிழாவாகச் சிறப்பிக்கப்படுகின்றது,
ஏனெனில் இப்பிறப்பு இறைமகன் மனிதஉரு எடுத்தப் பேருண்மையோடு மிக நெருங்கிய தொடர்பு கொண்டுள்ளது
என்றும் கூறினார். கிறிஸ்துவுக்கானப் பாதையையும் புதிய உடன்படிக்கையையும் தயாரித்ததன்
மூலம் பழைய உடன்படிக்கையை நிறைவு செய்த இறைவாக்கினர் என்று புனித யோவானை நான்கு நற்செய்தியாளர்களும்
அழுத்தம்கொடுத்து கூறியுள்ளனர் என்ற திருத்தந்தை, பெண்களில் பிறந்தவர்களுள் திருமுழுக்கு
யோவானைவிட பெரியவர் இல்லை என்ற இயேசுவின் வார்த்தைகளையும் குறிப்பிட்டார். புனித
யோவான், யோர்தான் ஆற்றில் மெசியாவுக்குத் திருமுழுக்கு அளித்து, வன்முறை இறப்பிலும் இயேசுவுக்கு
முன்னோடியாய் இருந்து தனது மறைப்பணியை நிறைவு செய்தார் என்ற திருத்தந்தை, வயதான தனது
உறவினர் எலிசபெத் யோவானைக் கருத்தாங்கியிருந்த காலத்தில் கன்னிமரியா அவருக்கு உதவினார்
என்று சொல்லி இம்மூவேளை செப உரையை நிறைவு செய்தார்.