உலக இளையோர் நாள் நிகழ்ச்சிகளுக்கு பிரேசில் நாட்டின் சிறைக் கைதிகள் ஏற்பாடுகள்
சன.31,2013. வரும் ஜூலை மாதம் பிரேசில் நாட்டின் ரியோ டி ஜெனீரோ நகரில் நடைபெறவிருக்கும்
உலக இளையோர் நாள் நிகழ்ச்சிகளுக்கு இளையோரை வரவேற்க அந்நாட்டின் சிறைக் கைதிகள் ஏற்பாடுகள்
செய்து வருகின்றனர். இந்த இளையோர் நாள் நிகழ்வில் பயன்படுத்தவிருக்கும் செபமாலைகள்,
திரு உருவங்கள் பதித்த அணிகலன்கள் போன்ற பல்வேறு புனிதப் பொருட்களை பிரேசில் சிறையில்
உள்ள 50 ஆண் மற்றும் 30 பெண் கைதிகள் தயாரித்து வருகின்றனர். சிறையில் உள்ள கைதிகள்
மீண்டும் வெளி உலகத்திற்குச் செல்லும்போது, அவர்களுக்கு உதவியாக இருக்கும் வகையில் இந்த
முயற்சி அமையும் என்று, இத்திட்டத்தை முன்னின்று நடத்தும் தேசிய குடும்பநலக் கழகத்தின்
உதவித் தலைவர், Paulo Fernando Melo கூறினார். இம்முயற்சியை பிரேசில் நாட்டில் உள்ள
அனைத்து சிறைகளிலும் ஆரம்பிக்கும் திட்டங்கள் உள்ளன என்றும், இக்கைதிகள் திருப்பலி உடைகள்
மற்றும் பல புனிதப் பொருட்கள் தயாரிக்கும் வகையில் அவர்களுக்குப் பயிற்சிகள் தரும் திட்டமும்
உள்ளது என்றும் உதவித் தலைவர் Melo கூறினார்.