"மிக்கேலாஞ்சலோவின் Pieta: 1972ம் ஆண்டு மே 21ன் நினைவாக - ஒரு முழுமையாக்கும்
கதை"
மே,22,2013. "மிக்கேலாஞ்சலோவின் Pieta: 1972ம் ஆண்டு மே 21ன் நினைவாக - ஒரு முழுமையாக்கும்
கதை" என்ற தலைப்பில் வத்திக்கானில் ஒரு கருத்தரங்கம் இச்செவ்வாயன்று நடைபெற்றது. 1972ம்
ஆண்டு மே மாதம் 21ம் தேதி, மனநலம் பாதிக்கப்பட்ட Laszlo Toth என்ற ஆஸ்திரேலிய பயணி ஒருவரால்
உலகப் புகழ்பெற்ற Pieta என்ற கன்னி மரியாவின் திரு உருவம் சுத்தியல் கொண்டு பழுதாக்கப்பட்டது. 1972,
1973 ஆகிய ஈராண்டுகள் இத்திரு உருவத்தை மீண்டும் பழைய நிலைக்குக் கொணரும் முயற்சிகள்
மேற்கொள்ளப்பட்டன. இம்முயற்சிகளின் 40ம் ஆண்டையொட்டி, வத்திக்கான் அருங்காட்சியகம் இக்கருத்தரங்கை
ஏற்பாடு செய்திருந்தது. உலகப் புகழ்பெற்ற Pieta திரு உருவம், 1964ம் ஆண்டு அமெரிக்காவின்
நியூயார்க் நகருக்கு எடுத்துச் செல்லப்பட்டது மட்டுமே, இந்த உருவம் வத்திக்கானை விட்டு
வெளியே கொண்டுசெல்லப்பட்ட ஒரே தருணம். அத்தருணத்தில், இந்த உருவத்தைப் பார்வையிட்டவர்கள்
2 கோடியே 10 இலட்சம் பேர் என்று சொல்லப்படுகிறது. மிக்கேலாஞ்சலோ உருவாக்கிய பல படைப்புக்களின்
சிகரம் Pieta எனப்படும் மரியாவின் திரு உருவம் என்று சொல்லப்படுகிறது. மிக்கேலாஞ்சலோ
உருவாக்கிய மற்றொரு புகழ்பெற்ற படைப்பான தாவீதின் சிலை, 1991ம் ஆண்டு மனநலம் குன்றிய
மற்றொருவரால் பழுதாக்கப்பட்டு, மீண்டும் பழைய நிலைக்கு சீரமைக்கப்பட்டது.