ஜூன்,14,2013. 720 கோடியாக இருக்கும் தற்போதைய உலக மக்கள் தொகை அடுத்த 12 ஆண்டுகளில்
மேலும் 100 கோடியாக உயரும், இவ்வெண்ணிக்கை 2050ம் ஆண்டில் 960 கோடியை எட்டும் என, ஐக்கிய
நாடுகள் நிறுவனம் இவ்வியாழனன்று வெளியிட்ட அறிக்கை கூறுகிறது. உலக மக்கள் தொகை வளர்ச்சி
பெரும்பாலும் வளரும் நாடுகளில் காணப்படுகின்றது என்றும், இதில் பாதிக்கும்மேல் ஆப்ரிக்காவில்
இடம்பெறுகின்றது என்றும் ஐ.நா. அறிக்கை கூறுகிறது. 2025ம் ஆண்டில் உலக மக்கள் தொகை
810 கோடியாக அதிகரிக்கக் கூடும் எனக் கூறும் அவ்வறிக்கை, மிகவும் வளர்ச்சி குன்றிய 49
நாடுகளின் மக்கள் தொகை 2013ம் ஆண்டில் ஏறக்குறைய 90 கோடியாக உயரும் எனவும் கூறுகிறது. வளர்ந்த
நாடுகளைக் காட்டிலும், இந்தியா, இந்தோனேசியா, பாகிஸ்தான், பிலிப்பைன்ஸ் போன்ற வளர்ந்துவரும்
ஆசிய நாடுகளிலும், ஆப்ரிக்க நாடுகளிலும் மக்கள் தொகை அதிகரிக்கக் கூடும் என ஐ.நா. தெரிவித்துள்ளது.