Laxamananda Saraswatiகொலைக்கு எவ்விதத்திலும் தொடர்பு இல்லாத 7 கிறிஸ்தவர்கள்
மீது கொலைப் பழி
அக்.02,2013. ஒரு குற்றமும் அறியாத அப்பாவிகள் கடந்த 5 ஆண்டுகள் சிறையில் அடைக்கப்பட்டு,
அவர்கள் செய்யாத குற்றத்தை அவர்கள் மீது சுமத்துவது, நீதியைப் பழிக்கும் ஒரு செயல் என்று
இந்தியக் கிறிஸ்தவத் தலைவர் ஒருவர் கூறினார். 2008ம் ஆண்டு ஒடிஸ்ஸா மாநிலத்தில், Laxamananda
Saraswati என்ற இந்துமதத் தலைவர் கொலை செய்யப்பட்டதையடுத்து, இக்கொலைக்கு எவ்விதத்திலும்
தொடர்பு இல்லாத 7 கிறிஸ்தவர்கள் மீது இக்கொலைப் பழியைச் சுமத்துவது தவறு என்று அகில உலக
இந்தியக் கிறிஸ்தவர்கள் கழகத்தின் தலைவர் Sajan George அவர்கள் கூறினார். Laxamananda
Saraswati அவர்களின் கொலைக்கு, தாங்களே காரணம் என்று மாவோயிஸ்டு குழுவினர் அறிக்கை வெளியிட்டதையும்
அரசு கவனத்தில் கொள்ளாமல், அப்பாவி கிறிஸ்தவர்கள் 7 பேர் மீது கொலைப்பழியைச் சுமத்துவது
எவ்வகையிலும் நீதியல்ல என்று Sajan George அவர்கள், ஆசிய செய்திக்குத் தெரிவித்துள்ளார். 2008ம்
ஆண்டு நிகழ்ந்த இக்கொலையைத் தொடர்ந்து, கந்தமால் பகுதியில் நடந்த கலவரங்களில், 100க்கும்
அதிகமான கிறிஸ்தவர்கள் கொல்லப்பட்டனர், 5,600 வீடுகள் கொளுத்தப்பட்டன, மற்றும் 54,000க்கும்
அதிகமானோர் வீடுகளை இழந்தனர். 7 அப்பாவி கிறிஸ்தவர்கள் மீது, இக்கொலைப் பழியைச் சுமத்தும்
தீர்ப்பு, அக்டோபர் 3, இவ்வியாழனன்று வெளியாகும் என்று ஆசியச் செய்திக் குறிப்பு கூறுகிறது.