டிச.,09,2013. இறைவனின் வருகைக்காக அன்புடன் காத்திருப்பது குறித்து நமக்குக் கற்பிக்கும்
அன்னை மரியோடு நாம் என்றும் இணைந்திருப்போம் என இஞ்ஞாயிறு நண்பகல் மூவேளை செப உரையின்போது
அழைப்புவிடுத்தார் திருத்தந்தை பிரான்சிஸ். அருள்நிறைந்தவராக, அழகுநிறைந்தவராக இருக்கும்
அனன்னைமரியா, இந்த திருவருகைக் காலத்தில் நம் ஒவ்வொருவரையும் வழிநடத்திச் செல்கின்றார்
என்ற திருத்தந்தை, கலிலேயாவின் ஒரு சிறு நகரிலிருந்து தேர்ந்தெடுக்கப்பட்ட அன்னைமரி,
சென்மப்பாவமில்லாமல் படைக்கப்பட்டு, நம்மைப் பாவங்களிலிருந்து விடுவிக்க வந்த இறைமகனின்
தாயானார் என உரைத்தார். இவ்வுலகை மீட்கும் அன்பின் கனியாக இருந்த அன்னைமரி, அவ்வன்பிலிருந்து
ஒருநாளும் விலகியதில்லை என்பதையும் குறிப்பிட்ட திருத்தந்தை, அந்த அன்னைமரியிடமிருந்து,
இறைவார்த்தையை பின்பற்றுவதற்கான மனவுறுதியையும் தாழ்ச்சியையும் கற்றுக்கொள்வோம் என மேலும்
கேட்டுக்கொண்டார்.