மிக ஏழை நாடுகளில் ஏழ்மையை ஒழிப்பதற்கு இன்னும் அதிகளவு முயற்சிகள் தேவை, ஐ.நா.
அக்.24,2014. உலகின் 48 வளர்ச்சி குன்றிய நாடுகள் குறித்து இவ்வியாழனன்று ஐ.நா. வெளியிட்டுள்ள
புதிய அறிக்கையில், ஏழ்மையை ஒழிப்பதில் தொடர்ந்து முன்னேறி வருகின்ற இந்நாடுகள் 2020ம்
ஆண்டுக்குள் கடும் ஏழ்மையை ஒழிக்க வேண்டுமெனில் அவை இன்னும் அதிகளவில் முயற்சிகள் எடுக்க
வேண்டுமெனக் கூறப்பட்டுள்ளது. இந்நாடுகள் உள்கட்டமைப்புகளில் முன்னேறி வருகின்றபோதிலும்,
வெளிநாடுகளின் பொருளாதார நெருக்கடி, வெப்பநிலை மாற்றம் தொடர்புடைய விவகாரங்கள், இயற்கைப்
பேரிடர்கள், நலவாழ்வு சார்ந்த பிரச்சனைகள் போன்றவற்றால் பாதிக்கப்படுகின்றன என்றும் ஐ.நா.
அறிக்கை கூறுகிறது. கினி, லைபீரியா, சியெரா லியோன் ஆகிய வளர்ச்சி குன்றிய நாடுகள்
எதிர்நோக்கும் எபோலா நோய்ப் பாதிப்பு பற்றியும் குறிப்பிட்டுள்ள அவ்வறிக்கை, ஐ.நா.வின்
மில்லென்ய வளர்ச்சித்திட்ட இலக்குகளில் வளர்ச்சி குன்றிய நாடுகள்மீது அதிகக் கவனம் செலுத்தப்பட
வேண்டுமெனவும் கேட்டுள்ளது.