2015-10-30 15:00:00

சுற்றுச்சூழல் குறித்து கத்தோலிக்கத் தலைவர்களின் விண்ணப்பம்


அக்.30,2015. சுற்றுச்சூழல் பாதுகாப்பு என்பது, சமுதாய நீதி மற்றும் வறுமைக்கு எதிரான போராட்டத்தோடு தொடர்புடையது என்பதால், மனித முன்னேற்றம், வாழ்க்கை முறை ஆகிய எண்ணங்களை மறு பரிசீலனை செய்து, மாற்று இலக்கணம் வகுக்கவேண்டும் என்ற விண்ணப்பத்தை, ஐந்து கண்டங்களைச் சார்ந்த கர்தினால்கள், முதுபெரும் தந்தையர் மற்றும் ஆயர்கள் விடுத்துள்ளனர்.

பாரிஸ் மாநகரில் நவம்பர் 30 முதல் டிசம்பர் 11 முடிய நடைபெறவிருக்கும் “COP21” எனப்படும் சுற்றுச்சூழல் உலக உச்சி மாநாட்டில் கலந்துகொள்ளவிருக்கும் அனைத்து அரசு தலைவர்கள் மற்றும் அதிகாரிகளுக்கு, ஆப்ரிக்கா, அமெரிக்கா, ஆசியா, ஐரோப்பா, ஓசியானியா ஆகிய கண்டங்களைச் சார்ந்த கத்தோலிக்கத் தலைவர்கள் இந்த விண்ணப்பத்தை அனுப்பியுள்ளனர்.

சுற்றிச்சூழல் பாதுக்காப்பையும், வறியோரின் வாழ்வு மேம்பாட்டையும் இணைத்து, கர்தினால்களும், ஆயர்களும் விடுத்துள்ள இந்த விண்ணப்பத்தில் 10 கருத்துக்களை முன்வைத்துள்ளனர்.

காலநிலை மாற்றத்தை தொழில்நுட்ப கண்ணோட்டத்துடன் மட்டும் காணாமல், அதை, ஒரு சமுதாய சவாலாகவும், நன்னெறி கண்ணோட்டத்துடனும் அணுகுமாறு, மதத்தலைவர்கள் விண்ணப்பித்துள்ளனர் என்று Fides செய்திக்குறிப்பொன்று கூறுகிறது.

காலநிலை மாற்றத்தால் அதிகம் பாதிக்கப்படும் வறியோர், மற்றும் பழங்குடியினர் ஆகியோரின் கருத்துக்களுக்குச் செவிமடுத்து, உலக உச்சி மாநாட்டின் முடிவுகள் எடுக்கப்படவேண்டும் என்று கர்தினால்களும், ஆயர்களும் தங்கள் விண்ணப்பத்தில் கூறியுள்ளனர். 

ஆதாரம் : Fides / வத்திக்கான் வானொலி








All the contents on this site are copyrighted ©.