2016-08-09 15:28:00

திருத்தந்தை : குவெட்டா தாக்குதல், அறிவற்றது, கொடூரமானது


ஆக.09,2016. பாகிஸ்தானின், பலுசிஸ்தான் மாநிலத்திலுள்ள குவெட்டா நகர் மருத்துவமனையில் இடம்பெற்ற குண்டுவெடிப்புத் தாக்குதலில் பலியானவர்களின் உறவுகளுக்கும், அந்நாட்டு அதிகாரிகளுக்கும், அந்நாட்டினர் எல்லாருக்கும் தனது ஆழ்ந்த அனுதாபத்தைத் தெரிவித்துள்ளார் திருத்தந்தை பிரான்சிஸ்.

அறிவற்ற மற்றும் கொடூரமான இவ்வன்முறை நடவடிக்கையில் காயமடைந்துள்ள அனைவருக்கும் தனது செபங்களையும் தெரிவித்துள்ளதோடு, இந்த வன்முறையால் பாதிக்கப்பட்டுள்ள அனைவருக்கும், ஆறுதலையும், சக்தியையும் இறைவன் வழங்குமாறு செபிப்பதாகவும் கூறியுள்ளார் திருத்தந்தை பிரான்சிஸ்.

திருத்தந்தையின் இந்த இரங்கல் செய்தியை, திருப்பீடச் செயலர் கர்தினால் பியெத்ரோ பரோலின் அவர்கள், திருத்தந்தையின் பெயரில், பாகிஸ்தான் நாட்டிற்கு அனுப்பியுள்ளார்.

பாகிஸ்தான் தலிபான் அமைப்பைச் சேர்ந்த ஒருவர், இத்திங்களன்று குவெட்டா நகர் மருத்துவமனையில் நடத்திய தற்கொலை குண்டுவெடிப்புத் தாக்குதலில், எழுபதுக்கும் மேற்பட்டோர் இறந்துள்ளனர் மற்றும் 200க்கும் மேற்பட்டோர் காயமடைந்துள்ளனர்.

ஆதாரம் : வத்திக்கான் வானொலி








All the contents on this site are copyrighted ©.