2016-10-14 16:38:00

ஹெய்ட்டி-புயலில் பாதிக்கப்பட்டவர்க்கு திருத்தந்தை நிதியுதவி


அக்.14,2016. ஹெய்ட்டி நாட்டில் அண்மையில் இடம்பெற்ற மாத்யூ கடும் புயலில் பாதிக்கப்பட்ட மக்களுக்கென, ஒரு இலட்சம் டாலர் நிதியுதவி வழங்கியுள்ளார் திருத்தந்தை பிரான்சிஸ்.

திருப்பீடத்தின் கோர் ஊனும் பிறரன்பு அலுவலகத்தின் வழியாக, திருத்தந்தை வழங்கியுள்ள இந்த நிதியுதவி, ஹெய்ட்டியில் கடும் புயலால் பாதிக்கப்பட்ட மக்கள் வாழும் மறைமாவட்டங்களுக்கு, பகிர்ந்து அளிக்கப்படும் என்று கூறப்பட்டுள்ளது.

கரீபியன் பகுதி தீவு நாடுகளைத் தாக்கியுள்ள மாத்யூ கடும் புயலில், ஹெய்ட்டியில், ஆயிரம் பேர் வரை இறந்துள்ளனர். ஆயிரக்கணக்கான மக்கள் வீடுகளை இழந்துள்ளனர் மற்றும் கட்டடங்களும், உள்கட்டமைப்புகளும் சேதமடைந்துள்ளன.

திருத்தந்தையின் இந்த அவசரகால உதவி, ஹெய்ட்டி மக்களுடன் திருத்தந்தை கொண்டிருக்கும் ஆன்மீக ஒருமைப்பாட்டுணர்வைக் காட்டுகின்றது என்று, கோர் ஊனும் பிறரன்பு அலுவலகம் கூறியது.

ஆதாரம் : வத்திக்கான் வானொலி








All the contents on this site are copyrighted ©.